மஹாசிவராத்திரி
------------------------------
திருக்கயிலை மாமலையின் பொன் முகடு...!!!
அம்மையும் அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.
அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க -
முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.
எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான்.
அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.....
''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''
அவன் இறுமாப்பு எய்திய அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.
ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து பின் வாங்கி நின்றது.
'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.
கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான் நாகராஜன்.
'... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''
பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...
அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.
நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று
'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.
' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான்.
பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான்.
பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -
சிவராத்திரியின் நான்கு காலத்திலும் வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான்.
மண்டையில் வைத்துக் கொண்டால் தான் - கனமாகி விடுகிறதே!...
தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில் மாநாடு கூட்டினான் - நாகராஜன்.
அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.
''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர்.
ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....
தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் - காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.
மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.
அவனை நல்ல காலம் நெருங்கியது.
சிவராத்திரியின் முதல் காலம்
---------------------------------------------
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)
விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான்.
தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.
கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.
இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
சிவராத்திரியின் இரண்டாம் காலம்
----------------------------------------------------
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)
முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.
அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.
பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...
இரண்டாங்காலத்தில் இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.
''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!...
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''
- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.
மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
சிவராத்திரியின் மூன்றாம் காலம்
------------------------------------------------------
(நள்ளிரவு 12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)
நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.
இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.
ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -
''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.
கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.
சிவராத்திரியின் நான்காம் காலம்
----------------------------------------------------
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)
பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!..
பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன.
சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.
ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.
அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.
நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.
கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.
கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில் தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.
''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''
குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.
அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,
கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.
அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.
அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.
பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்...!!!
------------------------------
திருக்கயிலை மாமலையின் பொன் முகடு...!!!
அம்மையும் அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.
அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க -
முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.
எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான்.
அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.....
''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''
அவன் இறுமாப்பு எய்திய அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.
ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து பின் வாங்கி நின்றது.
'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.
கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான் நாகராஜன்.
'... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''
பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...
அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.
நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று
'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.
' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான்.
பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான்.
பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -
சிவராத்திரியின் நான்கு காலத்திலும் வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான்.
மண்டையில் வைத்துக் கொண்டால் தான் - கனமாகி விடுகிறதே!...
தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில் மாநாடு கூட்டினான் - நாகராஜன்.
அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.
''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர்.
ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....
தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் - காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.
மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.
அவனை நல்ல காலம் நெருங்கியது.
சிவராத்திரியின் முதல் காலம்
---------------------------------------------
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)
விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான்.
தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.
கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.
இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
சிவராத்திரியின் இரண்டாம் காலம்
----------------------------------------------------
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)
முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.
அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.
பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...
இரண்டாங்காலத்தில் இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.
''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!...
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''
- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.
மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
சிவராத்திரியின் மூன்றாம் காலம்
------------------------------------------------------
(நள்ளிரவு 12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)
நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.
இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.
ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -
''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.
கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.
சிவராத்திரியின் நான்காம் காலம்
----------------------------------------------------
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)
பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!..
பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன.
சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.
ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.
அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.
நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.
கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.
கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில் தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.
''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''
குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.
அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,
கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.
அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.
அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.
பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்...!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக